சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.062
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாள் ஆய போகாமே, நஞ்சு பண் - பழந்தக்கராகம் (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=apnzZFYxrWY |
5.056
திருநாவுக்கரசர்
தேவாரம்
மைக் கொள் கண் உமை பண் - திருக்குறுந்தொகை (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=GTYoP7VldFQ |
5.057
திருநாவுக்கரசர்
தேவாரம்
முன்னமே நினையா தொழிந்தேன், உனை; பண் - திருக்குறுந்தொகை (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=UkE2WK1Vh6M |
7.020
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நீள நினைந்து அடியேன் உமை பண் - நட்டராகம் (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலிநாதர் வண்டமர்பூங்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=0caMnbm5nqY |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.062  
நாள் ஆய போகாமே, நஞ்சு
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருக்கோளிலி (திருக்குவளை) ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு கோளிலியப்பர் திருவடிகள் போற்றி )
நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம் கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக் கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே. | [1] |
ஆடு அரவத்து, அழகு ஆமை, அணி கேழல் கொம்பு, ஆர்த்த தோடு அரவத்து ஒரு காதன், துணை மலர் நல் சேவடிக்கே பாடு அரவத்து இசை பயின்று, பணிந்து எழுவார் தம் மனத்தில் கோடரவம் தீர்க்குமவன்-கோளிலி எம்பெருமானே. | [2] |
நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு மந்திரம் கொண்டு, ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல் கன்றி வரு காலன் உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்- கொன்றைமலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே. | [3] |
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத் தந்தைதனைச் சாடுதலும், சண்டீசன் என்று அருளி, கொந்து அணவும் மலர் கொடுத்தான்-கோளிலி எம்பெருமானே. | [4] |
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும் நல் பூசனையால், நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்- கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே. | [5] |
தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை, ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி, அங்கணன் என்று ஆதரிக்கும் நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன்- கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே. | [6] |
கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான், சொல்-நவிலும் மாமறையான், தோத்திரம் செய் வாயின் உளான், மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான், அம் கையினில் கொல்-நவிலும் சூலத்தான்-கோளிலி எம்பெருமானே. | [7] |
அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப, சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து, மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும் கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே. | [8] |
நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத் தாணு, எனை ஆள் உடையான், தன் அடியார்க்கு அன்பு உடைமை பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்- கோணல் இளம்பிறைச் சென்னிக் கோளிலி எம்பெருமானே. | [9] |
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல் இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்! நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல் கழல் கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே. | [10] |
நம்பனை, நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும் கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை, வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.056  
மைக் கொள் கண் உமை
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்கோளிலி (திருக்குவளை) ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு கோளிலியப்பர் திருவடிகள் போற்றி )
மைக் கொள் கண் உமை பங்கினன், மான் மழுத் தொக்க கையினன், செய்யது ஓர் சோதியன், கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி நக்கனை, தொழ நம்வினை நாசமே. | [1] |
முத்தினை, முதல் ஆகிய மூர்த்தியை, வித்தினை, விளைவு ஆய விகிர்தனை, கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி அத்தனை, தொழ நீங்கும், நம் அல்லலே. | [2] |
வெண்திரைப் பரவை விடம் உண்டது ஓர் கண்டனை, கலந்தார் தமக்கு அன்பனை, கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய அண்டனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே. | [3] |
பலவும் வல்வினை பாறும் பரிசினால்- உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை குலவினான், குளிரும் பொழில் கோளிலி நிலவினான்தனை,-நித்தல் நினைமினே! | [4] |
அல்லல் ஆயின தீரும்; அழகிய முல்லை வெண்முறுவல்(ல்) உமை அஞ்சவே, கொல்லை யானை உரித்தவன், கோளிலிச் செல்வன், சேவடி சென்று தொழுமினே! | [5] |
ஆவின் பால் கண்டு அளவு இல் அருந்தவப் பாலன் வேண்டலும், செல்! என்று பாற்கடல் கூவினான், குளிரும் பொழில் கோளிலி மேவினானை, தொழ வினை வீடுமே. | [6] |
சீர்த்த நல் மனையாளும் சிறுவரும் ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால், கூத்தனார் உறையும் திருக்கோளிலி ஏத்தி, நீர், தொழுமின்(ன்)! இடர் தீருமே. | [7] |
மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்! காலம் வந்து கடை முடியாமுனம் கோல வார் பொழில், கோளிலி மேவிய நீலகண்டனை நின்று நினைமினே! | [8] |
கேடு மூடிக் கிடந்து உண்ணும் நாடு அது தேடி, நீர், திரியாதே சிவகதி கூடல் ஆம்; திருக்கோளிலி ஈசனைப் பாடுமின்(ன்), இரவோடு பகலுமே! | [9] |
மடுத்து மாமலை ஏந்தல் உற்றான்தனை அடர்த்து, பின்னும் இரங்கி, அவற்கு அருள் கொடுத்தவன்(ன்) உறை கோளிலியே தொழ, விடுத்து நீங்கிடும், மேலைவினைகளே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.057  
முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்கோளிலி (திருக்குவளை) ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு கோளிலியப்பர் திருவடிகள் போற்றி )
முன்னமே நினையா தொழிந்தேன், உனை; இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன், செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி மன்னனே, அடியேனை மறவலே! | [1] |
விண் உளார் தொழுது ஏத்தும் விளக்கினை, மண் உளார் வினை தீர்க்கும் மருந்தினை,- பண் உளார் பயிலும் திருக்கோளிலி அண்ணலார்-அடியே தொழுது உய்ம்மினே! | [2] |
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்; ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு-எட்டும்; ஏழைமைப்பட்டு இருந்து, நீர், நையாதே, கோளிலி(ய்) அரன் பாதமே கூறுமே! | [3] |
விழவின் ஓசை ஒலி அறாத் தண்பொழில், பழகினார் வினை தீர்க்கும், பழம் பதி- அழல் கையான் அமரும்-திருக்கோளிலிக் குழகனார் திருப்பாதமே கூறுமே! | [4] |
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை, காலன் ஆகிய காலற்கும் காலனை,- கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலிச் சூலபாணிதன் பாதம் தொழுமினே! | [5] |
காற்றனை, கடல்நஞ்சு அமுது உண்ட வெண்- நீற்றனை, நிமிர்புன்சடை அண்ணலை, ஆற்றனை,-அமரும் திருக்கோளிலி ஏற்றனார் - அடியே தொழுது ஏத்துமே! | [6] |
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை, ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை,- கோதி வண்டு அறையும் திருக்கோளிலி வேத நாயகன் பாதம் விரும்புமே! | [7] |
நீதியால் - தொழுவார்கள் தலைவனை, வாதை ஆன விடுக்கும் மணியினை,- கோதி வண்டு அறையும் திருக்கோளிலி வேதநாயகன் பாதம் விரும்புமே! | [8] |
மாலும் நான்முகனாலும் அறிவு ஒணாப் பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை, கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலி நீலகண்டனை, நித்தல் நினைமினே! | [9] |
அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை நெருக்கி அம் முடிபத்து இறுத்தான், அவற்கு இரக்கம் ஆகியவன், திருக்கோளிலி அருத்தி ஆய் அடியே தொழுது உய்ம்மினே! | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.020  
நீள நினைந்து அடியேன் உமை
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கோளிலி (திருக்குவளை) ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு கோளிலிநாதர் திருவடிகள் போற்றி )
நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை மூன்று பொழுதும் வணங்கி வாழ்ந்து வரும் நாளில் திருக்கோளிலி என்னும் தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத் தில் ஒருசமயம் மழையின்மையால் நிலவளம் சுருங்கிற்று. விளை பொருள்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் மனங்கவன்று உணவுகொள்ளாது அன்றிரவு துயின்றார். பெருமான் அவர் கனவில் தோன்றி ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம் என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது. குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் இறைவன் கருணையை எடுத்தியம்பி அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும் என்று வேண்டினார். அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக்கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து நீளநினைந் தடியேன் என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச்செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார். இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக்கொண்டுவந்து குவிக்கும் என்றதோர் அருள்வாக்கு பெருமானருளால் விசும்பிடையெழுந்தது. அதுகேட்டுமகிழ்ந்த சுந்தரர் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்து பரவை யார்க்குத் தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.
பஞ்சத்தின் போதும் நல்ல உணவு கிடைக்க
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்; வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே, கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! . | [1] |
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்! விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே! தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! . | [2] |
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்; மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே! . | [3] |
சொல்லுவது என், உனை நான்? தொண்டை வாய் உமை நங்கையை நீ புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ? கொல்லை வளம் புறவில்-குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! . | [4] |
முல்லை முறுவல் உமை ஒரு பங்கு உடை முக்கணனே! பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா! கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி எம்பெருமான்! அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! . | [5] |
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய்! பரவை பசி வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே! . | [6] |
எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்; வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே! செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அன்பு அது(வ்) ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! . | [7] |
அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்! பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்; குரக்கு இனங்கள் குதி கொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; இரக்கம் அது ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! . | [8] |
பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும் கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்! தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! . | [9] |
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏத்திய பத்தும் வல்லார், அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான் உலகு ஆள்பவரே . | [10] |